Wednesday 14 October 2015

பெண் சிசுவைக் காப்போம்... பெருமிதம் காண்போம்


பெண் சிசுவைக் காப்போம்... பெருமிதம் காண்போம்


-------‘அடிபணிந்து போவதால்

பெண் அடிமையாகிறாள்...

எழுந்து நடப்பதால்

பெருமை அடைகிறாள்
!'' -
என்றான் ஓர்  கவிஞன்....உண்மைதான்! 

ஒரு காலத்தில் வீட்டுக்குள் அடைபட்டிருந்த பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருப்பது அவர்களுடைய வளர்ச்சியைத்தான் காட்டுகின்றது. இந்த நிலையில் ஆண் - பெண் குழந்தை பிறப்பு விகிதாசாரத்தில் அண்டை நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது என யுனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது..

இதுதொடர்பாக தெற்காசிய பிராந்தியத்தில் எட்டு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பூடான் நாட்டில் 1,000 ஆண்களுக்கு 987 பெண்களும் பாகிஸ்தானில் 1,000 ஆண்களுக்கு 985 பெண்களும் உள்ளனர். ஆனால் இந்தியாவில் மட்டும் 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற நிலை உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 121 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது முந்தைய கணக்கெடுப்பைவிட 18 கோடி அதிகமாகும். ஆண்கள் 62.37 கோடி பேரும், பெண்கள் 58.65 கோடி பேரும் உள்ளனர். கணக்கெடுப்பின்படி, 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் உள்ளனர்.

பெண் குழந்தைகளை செலவீனமாகவும் சுமையாகவுமே பெற்றோர்கள் கருதுகின்றனர் என்று ஒருவகை யில் காரணம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. போதிய அளவு விழிப்புணர்வு, கல்வி அறிவு இல்லாததும் வறுமை, பொருளாதாரம், நோய் போன்ற பிரச்னைகள் நிலவுவதும் பெண் குழந்தை பிறப்பு விகிதாசாரம் குறைவதற்குக் காரணமாய் அமைகின்றன. பெண் குழந்தை எனத் தெரிந்ததும் அதைக் கருவிலேயே அழித்துவிடுவதும் முக்கிய காரணமாய் உள்ளது.
‘100 மில்லியனுக்கும் மேல் காணாமல்போன பெண் குழந்தைகள்’ என்ற தலைப்பில் அமர்த்தியா சென், 1990-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி நியூயார்க் ரிவ்வியூ ஆஃப் புக்ஸ்' என்ற இதழில் ஒரு கட்டுரை எழுதி யிருந்தார். அந்தக் கட்டுரைதான் உலக நாடுகளை மட்டுமல்லாது இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

சர்வதேச அளவில் ஆண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் கவனிப்பு, பெண் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. நம் நாட்டை பொறுத்தவரை பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இப்படி தொடர்ந்து பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்தால் எதிர்காலத்தில் நாட்டில் சமூகப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

சமூகப் பிரச்னைகளில் பெண்களை முதலில் எதிர்கொள்வது வரதட்சணைதான். வரதட்சணைக் கொடுமையால் பல பெண்களின் எதிர்காலமும் வாழ்க்கையும் நிலைகுலைந்து போகின்றன. இதை வைத்துதான் ஒரு கவிஞன் இப்படி எழுதியிருந்தான்.

‘கண்மணியே...

கவலைப்படாமல் வா!

கண்கலங்காமல்

காப்பாற்றுகிறேன்

உன் வீட்டுச் சொத்துக்களை
!''

வரதட்சணை மட்டுமல்லாது பாலியல் தொல்லைகளும் பெண்களுக்கு நாட்டில் பெருமளவில் பெருகி வருகின்றன. இதனால் அவர்களின் தனி மனித சுதந்திரம் பறிக்கப்படுவதுடன் எதிர்கால கனவுகளும் சிதைந்து போய்விடுகின்றன. குழந்தைகளைப் பராமரிக்காத பெற்றோர்கள், விவாகரத்து பெற்றவர்கள், குடிக்கு அடிமையாகி குடும்பத்தையே மறந்தவர்கள், தனிமையில் விடப்படும் குழந்தைகள், பள்ளி, கல்லூரி, நிறுவனம் போன்றவற்றில் பலதரப்பட்ட பிரச்னைகள்... இப்படி எண்ணற்ற காரணங்களால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது முற்றிலும் உண்மை.
அந்த வகையில் பெண் குழந்தைகள் முன்னேற்றம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 24-ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ‘மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் பிரதமர் மோடி மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன் வரிசையில், ‘‘நாட்டில் பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது. குறிப்பாக ஹரியானா மாநிலத்தில் இந்த சமூக அவலம் அதிகமாக உள்ளது. எனவே பெண் சிசுவைக் காப்பாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். 
மேலும், மகள்களைக் காப்போம், மகள்களைப் படிக்க வைப்போம் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது.. இந்தத் திட்டத்தில் தீவிர விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஹரியானாவில் உள்ள பிபிபூர் என்னும் கிராமத்தின் தலைவர், மகள்களுடன் தந்தையர்கள் ‘செல்பி’ எடுக்கும் போட்டியை தொடங்கி வைத்துள்ளார். மகள்களை காக்கும், படிக்க வைக்கும் திட்டத்துக்கு இது ஒரு நல்ல தொடக்கமாகவும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்து இருக்கிறது. 

இதுபோல் அனைத்து தந்தையர்களும் தங்களுடைய மகள்களுடன் ‘செல்பி’ எடுத்து அனுப்புங்கள். இந்த முறையில் மகள்களைக் காப்போம், மகள்களைப் படிக்க வைப்போம் திட்டத்தைப் பெரும் இயக்கமாக நம்மால் மாற்ற இயலும்'' என்று அதில் கூறியிருந்தார். இந்தத் திட்டத்துக்கு இணையத்தில் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது..

‘‘வரவேற்க வேண்டிய திட்டம்தான். மேலும், பெற்றோர்களும் பாதுகாவலர்களும் பெண் குழந்தைகளை சுமை என்று கருதாமல் சுமைதாங்கி என்று கருத வேண்டும். ஆணை அடித்து வளர்க்க வேண்டும், பெண்ணை போற்றி வளர்க்க வேண்டும் என்பதுபோல பெண் குழந்தைகளுக்கு அதிக அளவில் கல்வி அறிவைப் போதிக்க வேண்டும். அத்துடன் தைரியத்தையும் கற்றுத் தர வேண்டும். பெண் குழந்தைகளுக்கு என்று அரசு நடைமுறையில் வைத்திருக்கும் திட்டங்களில் பெற்றோர்கள் பங்கேற்று அவற்றின் வழியில் நிற்க வேண்டும்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
‘‘சூப்பர் திட்டம். பொம்பள புள்ள ஒண்ணும் கேவலம் இல்ல. அவுங்கதான் இப்ப எல்லாத்துலயும் நம்பர் ஒன். எங்களுக்கு 10 வருஷமா குழந்த இல்ல. எத்தன பொம்பள புள்ள பொறந்தாலும் எங்களுக்கு பரவாயில்ல. ஆனா, அந்தக் கொடுப்பின இல்ல சார்'' என்று நம்மிடம் ஏங்கினர் ஒரு குழந்தையில்லா தம்பதியினர்.

இப்படி நாட்டின் நிலை ஒருபுறம் இருக்க, கருக்கலைப்பும் மறுபுறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
‘‘பெண் குழந்தைகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளின் மகத்தான திட்டங்கள் மட்டும் போதுமானவை அல்ல. பாலியல், வரதடசணை, கருக்கலைப்பு போன்றவற்றுக்கான சட்டங்கள் அமலில் இருந்தாலும் அவைகள் கடுமையாக்கப்பட வேண்டும். விழிப்பு உணர்வு பிரசாரங்களை அதிகப்படுத்த வேண்டும்'' என்பதே கல்லூரி மாணவிகளின் வலிமையான கோரிக்கையாக வைக்கப்படுகிறது.

பெண் சிசுவைக் காப்போம்... பெருமிதம் காண்போம்!

- ஜெ.பிரகாஷ்