Friday 6 November 2015

பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்

பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்

First Published : 03 November 2015 01:32 AM IST
அசைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மிக அதிகம். அதிக புரதச் சத்துகள் அடங்கிய அசைவ உணவுகளான மீன் மற்றும் இறைச்சி அதிகமாக இம்மாநிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. 
 மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றியிறைச்சி, கோழியிறைச்சி போன்றவை தற்போது மிக அதிகமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. பொதுமக்களிடம் விற்கப்படும் இத்தகைய இறைச்சி உணவுகள் பல நிலைகளில் விதிமுறைகள் மீறப்படுவதால் பல கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் 18-ஆவது பண்ணை விலங்குகள் கணக்கெடுப்பின்படி, சராசரியான காளை மற்றும் பசுக்கள் இணைந்து 112 லட்சமும், எருமை மாடுகள் 20 லட்சமும், 80 லட்சம் செம்மறியாடுகளும், 93 லட்சம் வெள்ளாடுகளும், மூன்று லட்சம் பன்றிகளும் உள்ளன. 
 இந்திய அளவில் எண்ணிக்கையில் தமிழகத்தில் கோழி 2-ஆம் இடத்திலும், செம்மறியாடு 4-ஆம் இடத்திலும், வெள்ளாடு 7-ஆவது இடத்திலும், காளை மற்றும் பசு 9-ஆவது இடத்திலும், எருமை 10-ஆவது இடத்திலும் உள்ளன. உணவுக்காக இத்தகைய விலங்குகள் மற்றும் பறவைகள் கொல்லப்படுவதும் தமிழகத்தில் அதிகம்.
 தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1958-இன் படி, உணவுக்காக விலங்குகளைக் கொல்வதற்குத் தகுதிச் சான்றுகள் இருப்பின் அவ்விலங்குகளைக் கொல்லலாம். விலங்குகள் என்பது காளை, மட்டக் காளை, பசு, எருமை முதலியன அடங்கும். 
 தகுதிச் சான்றிதழ் 10 வயதிற்கு அதிகமான, வேலை செய்வதற்கும், சந்ததிகளை உருவாக்கயியலா அல்லது குணமாக்கவியலா நோய்களைத் தாங்கிய விலங்குகளுக்கு மட்டும் வழங்கப்படும். இதில் விதிமுறை மீறலிருப்பின் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். 
 பின்னர், 1976-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி பசுக்களைக் கொல்வதற்கான தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் உள்ள எந்த இறைச்சி கொட்டில்களிலும் பசுக்கள் மற்றும் கன்று போடாத இளம் பசுக்களைக் கொல்லக்கூடாது என சட்டம் உள்ளது.
 மத்திய அரசின் விலங்குகள் வதைச் சட்டம் 1960-இன் படி, விலங்குகளை வதைப்பது, பால் அதிகமாக சுரப்பதற்கு செய்யப்படும் வழிமுறைகள் போன்ற பல விஷயங்களைக் குறித்த வழிமுறைகள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின், பல சட்டத் திருத்தங்கள் வெவ்வேறு காலக் கட்டங்களில் மாற்றியமைக்கப்பட்டன. அத்தனை சட்டங்களும் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன.
 மத்திய அரசின் விலங்குகள் வதைச் சட்டம் 1960-இன் கீழ், 2001 மார்ச் 26-ஆம் தேதி வெளிட்ட அறிக்கையில், நகராட்சி இறைச்சிக் கொட்டில்கள் மற்றும் தனியார் இறைச்சி கொட்டில்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
 விலங்குகள் வதை செய்யப்படும் இறைச்சிக் கொட்டில்கள் மத்திய மற்றும் மாநில நகராட்சித் துறைகளில் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், அரசு அங்கீகாரம் பெறாத இறைச்சிக் கொட்டில் மற்றும் சட்ட விதிமுறைக்குள்பட்ட அதிகாரக் குழுவின் உரிமம் பெறாத நபர்கள், விலங்குகளைக் கொல்வதற்கு உரிமம் இல்லை. 
 சினையான விலங்குகள் மற்றும் மூன்று மாதக் குட்டிகளை உடைய விலங்குகளைக் கொல்வதற்கு உரிமையில்லை. உணவுக்காகக் கொல்லப்படும் விலங்குகளுக்கு கால்நடை மருத்துவரிடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
 இம்மருத்துவர் இந்திய கால்நடை மருத்துவக் கழகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது நகராட்சி கால்நடை மருத்துவராக இருக்க வேண்டும். இம்மருத்துவர், கொல்லப்படும் விலங்குகளை முழுவதுமாக ஆய்ந்து சான்றிதழ் வழங்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 12 விலங்குகள் அல்லது ஒரு நாளுக்கு 96 விலங்குகளுக்கு மேல் சான்றிதழ் வழங்க இயலாது.÷
 கால்நடை மருத்துவர் ஒவ்வொரு விலங்குகளுக்கும் வழங்கும் உடல் தகுதி சான்றிதழ், மத்திய அரசு வழங்கியுள்ள (மாதிரி) சான்றிதழ் முறையில் இருக்க வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட விலங்குகள் 24 மணி நேரத்துக்குப் பிறகே கொல்லப்பட வேண்டும். அதுவரையில் இறைச்சி கொட்டிலில் தனியாக வசதி செய்யப்பட்ட இடத்தில் உணவு, தண்ணீர் வழங்கி பாதுகாக்கப்பட வேண்டும். 
 பின்னர், வேறு விலங்குகளின் கண்முன்னே விலங்குகள் கொல்லப்படக் கூடாது. கொல்வதற்கு முன் இந்த விலங்குகளுக்கு, வேறு எந்த வேதிப் பொருள்களோ, மருந்துகளோ, ஹார்மோன்களோ வழங்கி இருக்கக் கூடாது. மேலும், கொல்லப்படும் இடம், தோலுரிக்கும் இடம், கழிவுகள் இடும் இடம், வெட்ட பயன்படுத்தும் உபகரணங்கள் குறித்த பல விதிமுறைகள் இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன.
   விலங்குகள் இறைச்சிக்காக குளக்கரைகளிலும், வீதிகளிலும் அனுமதிக்கப்படாத இடங்களிலும் வெட்டப்படுகின்றன. சுகாதாரமில்லாத அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. 
 விலங்குகள் வழி மனிதர்களுக்கு பரவும் பல கொடிய நோய்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. சுகாதாரமற்ற முறையில் பல வழிகளில் விதிமுறைகளை மீறி பொதுமக்களிடம் விற்கப்படும் இவ்விறைச்சிகளால் பல நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 ஒரு சில விதிமுறை மீறல்கள்  ஆபத்தை உருவாக்கும்.