Monday 14 December 2015

மோசமடைந்து வரும் கல்வித்தரம்: குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை


நாட்டில் கல்வித்தரம் மோசமடைந்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார். 

கொல்கத்தாவில் ராஜ்பவனில் தேவரஞ்சன் முகர்ஜி நினைவு சொற்பொழிவு ஆற்றுகையில், 'ஆராய்ச்சி குறித்த அக்கறையின்மை கவலையளிக்கிறது" என்றார்.

மேலும், இந்த விஷயத்தில் பிரிக்ஸ் நாடுகளில் பிரேசில், சீனா நம் நாட்டைக் காட்டிலும் முன்னணியில் இருக்கிறது என்றார் பிரணாப் முகர்ஜி. 

“ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கு நாம் கொடுக்கும் அழுத்தம் போதாமையாக உள்ளது. ஆராய்ச்சி மீது பொதுவாகவே ஒரு அக்கறையின்மை நிலவி வருகிறது. ஆராய்ச்சியில் பிரேசில், சீனா ஆகிய நாடுகள் நம்மைக் காட்டிலும் நெடுந்தொலைவு முன்னேற்றம் கண்டுள்ளது. 

சர்வதேச தரவரிசைகளில் நம்முடைய முன்னணி கல்வி நிறுவனங்கள் கூட இடம்பெறுவதில்லை. தரவரிசைகளுக்காக நாம் தகவல்கள் அளிக்கும் போது போதுமான, சம்பந்தப்பட்ட தகவல்களை அளிப்பதில் நாம் கவனம் செலுத்துவதில்லை. இன்னொரு விஷயம் என்னவெனில் இன்றைய உலகம் குளோபல் மட்டத்தில் வளர்ந்து வருகிறது. இண்டெர்நெட் கண்டுபிடிப்பு மற்றும் அதன் பரவலான பிரயோகம், மொபைல் போன்கள், தொலைக்காட்சி உள்ளிட்ட தொடர்பு சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சி ஆகியவை ஒட்டுமொத்தமாக மனிதர்களிடத்தில் பார்வைகளை மாற்றியுள்ளது. 

மேலும் பிற பல்கலைக் கழகங்கள், அறிவுஜீவிகள், துறைத்தலைவர்கள் ஆகியோரிடையே கருத்துப் பரிமாற்றங்கள் மிக முக்கியம். மேலும் மாணவர்கள், ஆசிரியர்களிடையே போதுமான பரிவர்த்தனைகள் இல்லை. கல்வியின் தரம் முன்பு இருந்ததை விட குறைந்துள்ளது”

இவ்வாறு பேசியுள்ளார் பிரணாப் முகர்ஜி.