Saturday 9 January 2016

தேர்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்: 

சென்னையில் நாளை துவக்கம்

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு, பயிற்சி 
அளிக்க உள்ள பயிற்சியாளர்களுக்கான முகாம், சென்னையில் 
நாளை முதல் மூன்று நாட்களுக்கு, நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை
 பொதுத் தேர்தல், ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே,
 தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை, தேர்தல் கமிஷன் 
மேற்கொண்டுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு 
பயிற்சி அளிப்பதற்காக, மாவட்டத்திற்கு ஆறு 
பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


அவர்களுக்கு கடந்த மாதத்தில் இருந்து, பல்வேறு 
பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.டிச., 30 மற்றும் 31ம் தேதி, 
தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கு சேலத்தில் பயிற்சி 
அளிக்கப்பட்டது. நேற்று சென்னையில், ஆறு மாவட்டங்களைச் 
சேர்ந்த, செய்தி மக்கள் தொடர்பு 
அலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தலின்போது, 
சமூக வலைதளங்களில், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை 
வலியுறுத்தி பிரசாரம் செய்வது, மக்கள் இடையே விழிப்புணர்வு 
ஏற்படுத்துவது குறித்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள 
இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நேரடியாக நடத்தும் 
பயிற்சி வகுப்பு சென்னை மற்றும் பவானிசாகரில், இரண்டு கட்டமாக
 நடைபெற உள்ளது.
சென்னையில், நாளை முதல், 13ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற 
உள்ளது. இதில், 21 மாவட்டங்களில் இருந்து, மாவட்டத்திற்கு, ஆறு 
பயிற்சியாளர்கள் வீதம் கலந்து கொள்ள உள்ளனர்.பவானிசாகரில், 
19ம் தேதி முதல் 22ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 
இதில், 11 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.